

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரின் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில், “ சவுதியில் எண்ணெய் வளமிக்க முக்கிய நகரான ஜெட்டாவில் ஏவுகணை தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம். Quds-2 ஏவுகணைகளை பயன்படுத்தி ஜெட்டாவில் தாக்குதல் நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளது.
ஏமன் போரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போர் புரியும் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில்சவுதிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா வாபஸ் பெற்றது.
இருப்பினும், “ஹவுத்தி அமைப்பினர் தொடர்ந்து எங்கள் பாதையில் தீவிரவாத அமைப்பாகவே பார்க்கப்படுவர்” என்று சவுதி தெரிவித்துள்ளது.
ஏமன் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.