

பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு சவுதியை பொறுப்பேற்க வைப்பேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் ஏற்று இருக்கிறார்.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் உத்தரவிட்டார் என்று நாங்கள் நடத்திய விசாரணையில் மதிப்பிட்டுள்ளோம். ஜமாலைக் கொல்ல சல்மான்தான் உத்தரவிட்டிருக்கிறார்” என்று கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் அறிக்கையை சவுதி அரசு தவறானது, முற்றிலும் எதிர் மறையானது என்று விமர்சித்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “ நான் சவுதி மன்னரிடம் பேசினேன். இளவரசிரிடம் அல்ல, ஆட்சி மாற்றப்பட்டு விடட்டது. சில மாறுதல்களை கொண்டு வர போகிறோம் என்று நான் அவரிடம் கூறினேன்.
மனித உரிமை மீறல்களுக்கு சவுதி நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம். ஜமால் கொலைத் தொடர்பாக வந்த அறிக்கையை கடந்த அரசு வெளியிடவில்லை. நாங்கள் எங்களிடம் வந்தடைந்தவுடன் அதனை வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜமால்?
ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே அமெரிக்கா தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரை கவுரவப்படுத்தும் வகையில் கஷோகி சட்டம் என்றொரு சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தியது. அதன்படி, பத்திரிகையாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவோரை அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.