Published : 26 Feb 2021 07:14 PM
Last Updated : 26 Feb 2021 07:14 PM

காஷ்மீர் பிரச்சனை; இந்தியா - பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லை மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யுமா என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “ இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் நிலவும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சம்மதித்துள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது. மேலும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று பதிலளித்தார்.

முன்னதாக இலங்கை பயணத்தில் காஷ்மீர் பிரச்சனையை, இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று இம்ரான் கான் கூறியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்டபின் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் பெரிய அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா தரப்பிலும் பதிலடி தரப்பட்டு, பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் வலுத்து வந்தது. இருப்பினும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயார் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x