Published : 11 Feb 2021 10:18 AM
Last Updated : 11 Feb 2021 10:18 AM

மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை: உத்தரவில் கையெழுத்திட்ட ஜோ பைடன்

மியான்மர் ராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “மியான்மர் ராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீதான நடவடிக்கைகளை இன்று அறிவிக்கிறேன். மியான்மர் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியை ராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறேன். இது அவர்களது குடும்பத்தினர் மீதும் அடங்கும்” என்று தெரிவித்தார்.

இதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை நைப்பியாவில் ராணுவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தத் தாக்குதலில் இருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மியான்மர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்தது என்ன?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ. நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x