ஜெர்மனியில் மார்ச் வரை கட்டுப்பாடுகள் தொடரும்: ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு

ஜெர்மனியில் மார்ச் வரை கட்டுப்பாடுகள் தொடரும்: ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு
Updated on
1 min read

ஜெர்மனியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் ஏஞ்சலா மெர்கல் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இதுகுறித்து ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “இந்த பிரிட்டிஷ் வைரஸைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் பத்து மடங்கு எண்ணிக்கையில் தொற்று பரவும். நாம் இன்னும் 10 வாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

அதில் ஜெர்மனியும் ஒன்று. கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in