Last Updated : 25 Dec, 2020 08:43 AM

 

Published : 25 Dec 2020 08:43 AM
Last Updated : 25 Dec 2020 08:43 AM

விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்: மைக் பாம்பியோவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ : கோப்புப்படம்


மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 4 வாரங்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் இது குறித்துப் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரமிளா ஜெயபால், எம்.பி.க்கள் டொனால்ட் நார்கிராஸ், பிரென்டன் எஃப் போயல், பிரையன் பிட்ஸ்பாட்ரிக், மேரி கே ஸ்கேன்லான், டெபி டிங்கில், டேவிட் ட்ரான் ஆகியோர் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலகளவில் கவனத்தை நாளுக்கு நாள் ஈர்த்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் விவாயிகள் போராட்டம் குறித்து 12-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள் கவலைத் தெரிவித்திருந்தார்கள்.

அமெரிக்க சீக்கிய கூட்டமைப்பின் துணைத்தலைவர் எம்.பி. ஜான் காராமென்டி, எம்.பி. ஜிம் கோஸ்டா, ஷீலா ஜேக்ஸன் லீ ஆகியோர் இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்துக்கு கடிதம் எழுதி, விவசாயிகள் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவையும், அமைதியாக போாரட்டம் நடத்துவது விவசாயிகளின் உரிமை எனத் தெரிவித்திருந்தார்கள்.

விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளதால், அவர்களுக்கு் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குடியுரசு கட்சியின் எம்.பி. டேவிட் ட்ரான் இந்திய அரசைவலியுறுத்தியிருந்தார்.

ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டு தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் கருத்துக்கள் தேவையற்றது, உண்மை நிலவரங்களை, அறியாமல் பேசுகிறார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இந்த சூழலில் மீண்டும் அமெரிக்க எம்.பி.க்கள் 7 பேர் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவுக்கு கடிதம் எழுதி, விவசாயிகள் போராட்டம் குறித்து இ்ந்திய அரசிடம் பேசுமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி 7 எம்.பிக்களும் கடிதம் எழுதியுள்ளனர். அதில் “ வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகள் போராட்டம் என்பதை பஞ்சாபோடு தொடர்புள்ள சீக்கிய அமெரிக்கர்கள் தொடர்பானது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களோடு தொடர்புள்ள அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களோடும் தொடர்புடையது.

அமெரிக்காவில் வாழும் பல இந்தியர்கள், இந்தியாவில் வாழும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், இந்த போராட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களின் பூர்வீக நிலம் பாதிக்கப்படும், நலனும் பாதிக்கப்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள்.

இது மிகவும் தீவிரமான சூழல், ஆதலால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு, விவசாயிகள் போராட்டம் குறித்த கவலைகளையும், வெளிநாடுகளில் அரசியல் பேச்சு சுதந்திரத்தைக் காக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்

இந்தியா தன்னுடைய கொள்கைகளை வடிவமைக்க, தீர்மானிக்கஉரிைம இருக்கிறது, ஏற்கெனவே இருக்கும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களின் உரிமையை மதிக்க வேண்டும், அவர்களின் பொருளாதார பாதுகாப்பு மீது நடத்தப்படும் தாக்குதலையும் கவனிக்க வேம்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x