

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் தாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “அமெரிக்க அதிபராகப் புதிதாக தேந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அங்கிருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பதும் தவறு” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தீர்க்க இரு நாடுகளும் உதவ முடியும் என்று நம்புகிறோம் என்று ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜியோ அமெரிக்க உறவை புறக்கணிப்பதுபோல் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றிக்கு 270 பிரதிநிதிகள் வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
ஜனவரி 20-ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பார்.