

கரோனா தடுப்பு மருந்து டிசம்பர் 27ஆம் தேதி முதல் பொதுமக்களுக்குச் செலுத்தப்படுவதாக ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் கூறும்போது, “நாங்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதிபர் ஏஞ்சலா மெர்கல் தலைமையில் எடுக்கப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
ஜெர்மனியில் கரோனா பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு முடிவில் ஊரடங்கை அறிவித்தார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.