

பிரிட்டனில் முதல் முதலாக 87 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த முதியவருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “ 87 வயதான இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஹரி சுக்லா என்பவருக்கு முதல் முதலாக நாட்டில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. அவருக்கு ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இது பாராட்டுக்குரியது. மிகப்பெரிய முன்நகர்வு” என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஹரி சுக்லா கூறும்போது.”தொற்று நோயின் முடிவை நோக்கி நாம் வருகிறோம் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் கரோனா தடுப்பு மருந்தை பெற்று கொண்டேன். இது எனது கடமை. என்னால் முடிந்த உதவிகளை நான் செய்ய வேண்டும். நான் தேசிய சுகாதார மையத்தில் பணியாற்றிருக்கிறேன். அதில் பணியாற்றுபவர்களின் கடும் உழைப்பு எனக்கும் தெரியும். அவர்கள் மீது மிக பெரிய மரியாதை வைத்துள்ளேன்” என்றார்.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து அங்கு கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்றால் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.