ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 20,39,926 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 20,39,926 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,318 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, தினமும் 20,000க்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், ''ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,39,926 ஆக அதிகரித்துள்ளது.

15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கொரிய அரசுடன் ஸ்புட்னிக்-5 மருந்து உற்பத்திக்கு ரஷ்யா ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in