

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,824 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராபர்ட் கோச் மருத்துவ நிறுவனம் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,824 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,01,327 ஆக உள்ளது.
நேற்று மட்டும் 62 பேர் பலியாக, ஜெர்மனியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 12,547 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.