Published : 13 Nov 2020 12:06 PM
Last Updated : 13 Nov 2020 12:06 PM
பிரேசிலில் கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,64,281 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 908 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,64,281 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 33,207 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,81,582 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அரசு கூறுவதைவிட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலில் கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு 2.8% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
இந்த நிலையில் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக மருத்துவப் பரிசோதனைகளை பிரேசில் நிறுத்தி வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT