

அமெரிக்காவின் அழுத்தத்தால் அகதிகள் நாடு திரும்புவதில் பாதிப்பு ஏற்படும் என்று சிரியா அதிபர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசாத் கூறும்போது, “அமெரிக்கா அளிக்கும் அழுத்தம் காரணமாக அண்டை நாடுகளில் உள்ள அகதிகள் நாடு திரும்புவதில் பாதிப்பு ஏற்படும். சுமார் 50 லட்சத்துக்கு அதிகமான அகதிகள் அண்டை நாடுகளில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.