

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்த தீவுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. அங்கு சுரபயா நகரில் இருந்து பன்ஜார்மாசின் நகருக்கு நேற்று பயணிகள் கப்பல் புறப்பட்டது. இதில் மாலுமிகள், ஊழியர்கள், பயணிகள் உட்பட 234 பேர் பயணம் செய்தனர். கிழக்கு ஜாவா கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்து தத்தளித்தனர். அந்த பகுதியில் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கப்பலில் பயணம் செய்த 130 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் இந்தோனேசிய தேசிய மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மீட்புப் படை அதிகாரிகள் கூறும்போது, “கிழக்கு ஜாவா கடலில் கப்பல் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் கண்காணிப்பு விமானம் மூலம் தேடுதல் பணி நடைபெறுகிறது. ரோந்து படகுகள், கடற்படை கப்பல்களும், மாயமான கப்பலை தேடி வருகின்றன" என்று தெரிவித்தனர். கடந்த 2020 முதல் 2026 வரையிலான காலத்தில் இந்தோனேசியா முழுவதும் 111 கப்பல் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.