

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடுபாடுகளில் சிக்கிய 3 வயதுச் சிறுமி, நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார். சிறுமி மீட்கப்படும்போது சுற்றியுள்ள அனைவரும் 'கடவுளே சிறந்தவர்' என்று முழக்கமிட்டனர்.
துருக்கியில் கடந்த 30 ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.
ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும். துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்துள்ளன. இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலையும் தாக்கின.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. கார்கள் உட்பட பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலநடுக்கத்திற்கு 100 பேர்வரை பலியாகினர். 1000 பேர்வரை காயமடைந்தனர்.
இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் கட்டிட இடுபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கட்டிட இடுபாடுகளில் சிக்கிய 3 வயதுச் சிறுமி, நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இஸ்மிர் பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அய்தா என்ற அந்த மூன்று வயதுச் சிறுமி துருக்கி மீட்புப் படையினரால் கவனமாக எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் மீட்கப்பட்டிருக்கிறார். சிறுமி மீட்கப்படும்போது சுற்றியுள்ள அனைவரும் 'கடவுளே சிறந்தவர்' என்று முழக்கமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.