ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,700 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்பு 14 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 15,700 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 14,47,335 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 317 பேர் பலியான நிலையில், ரஷ்யாவில் கரோனாவுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 24,952 ஆக அதிகரித்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் சில வாரங்களாகவே 10,000க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தது ரஷ்யா.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள இரண்டாவது கரோனா தடுப்பு மருந்துக்கு அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார். ஆனால், அம்மருந்து குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in