

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 253 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா பலி எண்ணிக்கை 30,000-ஐக் கடந்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 253 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 30,123 ஆக அதிகரித்துள்ளது. 5,26,490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சமீபநாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.