

ரஷ்யா தான் கண்டுபிடித்துள்ள இரண்டாவது கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் அரசு தொலைகாட்சியில் கூறும்போது, “ ரஷ்யா தனது இரண்டாவது கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அம்மருந்தின் பெயர் குறித்த எந்த விவரத்தையும் அதிபர் புதின் வெளியிடவில்லை.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தது ரஷ்யா.
ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை.