

ஆப்கானிஸ்தானில் பக்லான் மாவட்டத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 ஆப்கான் வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் பக்லான் மாகாணத்தில் உள்ள நூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) சோதனை சாவடியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 16 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும், தலிபான்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்களைத் தலிபான்கள் விடுவித்தனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.