எனக்கு கரோனா இல்லை, சரியாகி விட்டது, யாரை வேண்டுமானாலும் முத்தமிடுவேன், வலுவாக இருக்கிறேன்: பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு

எனக்கு கரோனா இல்லை, சரியாகி விட்டது, யாரை வேண்டுமானாலும் முத்தமிடுவேன், வலுவாக இருக்கிறேன்: பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
Updated on
1 min read

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், தான் கரோனாவிலிருந்து மீண்டு வந்ததற்கு அத்தாட்சியாக நான் யாரை வேண்டுமானாலும் முத்தமிடுவேன் என்று பேசிஉள்ளது அங்கு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது வெள்ளை மாளிகையில் பலருக்கும் கரோனா தொற்று இருப்பதாக அங்கு ஐயம் எழுந்துள்ளது.

கரோனா தொற்று பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் முழுக்க கரோனாவிலிருந்து மீண்டுள்ளாரா என்பது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியவண்ணமே உள்ளனர்.

ஆனால் ட்ரம்ப் மீண்டும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டோ சான்போர்டு சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய டிரம்ப், சான்போர்டில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச தொடங்கினார். அவர் பேசும்பொழுது, இன்று முதல் 22 நாட்களில் தேர்தலை வெற்றி கொள்ள போகிறோம். வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறோம்.

நான் வலிமை பெற்றவனாக உணர்கிறேன். பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் நடந்து செல்வேன். நான் அங்கு சென்று கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன். ஆடவரையும், அழகான பெண்களையும் மற்றும் ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன் என கூறினார்.

நான் ஒன்றும் வயது முதிர்ந்தவன் கிடையாது. நான் இளமையானவன். நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன் என டிரம்ப் கூறியது கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது.

ட்ரம்ப் தனக்கு ஒன்றுமில்லை என்று கூறுவதை அங்கு பலரும் ஏற்க மறுத்து வருகின்றனர். பிசிஆர் சோதனைக்குப் பிறகே ஒருவருக்கு கரோனா நெகெட்டிவ் என்று கூற முடியும்.

ட்ரம்பின் இத்தகைய அலட்சியப் போக்கை விமர்சித்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், “ட்ரம்புக்குக் கரோனா என்று கண்டுபிடித்த பிறகும் அவரது நடத்தை மனசாட்சி உள்ளவராக அவரைக் காட்டவில்லை. அவர் எவ்வளவு காலம் அதிபராகத் தொடர்வாரோ அவ்வளவு காலம் அவரது அலட்சியமும் நீடிக்கும், கரோனா மீதான அவரது சொந்த அக்கறையின்மையே நாட்டு மக்கள் மீதும் அவரிடத்தில் பிரதிபலிக்கிறது.

புளோரிடாவில் கரோனாவுக்கு 15,000 பேருக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். ஆனால் புளோரிடாவை அங்கு சென்று புகழ்ந்து பேசுகிறார், வாக்குச் சேகரிக்கிறார்” என்று ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in