

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “ அமெரிக்காவில் குளிர் காலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
நியூயார்க்கில் கடந்த வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நியுஜெர்சியிலும் கரோனா அதிகரித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.