

தென்அமெரிக்க நாடான சிலியில் அண்மையில் நேரிட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
சிலி நாட்டின் இலாபெல் பகுதியில் கடந்த 16-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேரை காணவில்லை. 480-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள் ளனர்.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஆழிப் பேரலையும் தாக்கியது. இதனால் 9 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதுவரை 300-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் அந்த நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.3 ஆகப் பதிவானது. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதாரமான குடிநீர், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த நாட்டு மக்களுக்கு தாராளமாக உதவுமாறு ஐ.நா. சபையும் இதர பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் அழைப்பு விடுத்துள்ளன.