

சீனாவில் ஆயிரக்கணக்கான மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ( ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் , “ சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கில் உள்ளது நிங்ஜியா மண்டலம். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். இங்குள்ள டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இந்நிலையில், வெய்ஸு பகுதியில் ஏற்கெனவே இருந்த மசூதியை இடித்து விட்டு புதிதாக மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில், மீறினால், மசூதியை அரசே அப்புறப்படுத்தும் என்று சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இங்கு வசிக்கும் உய்குர் முஸ்லிம் மக்களை, சீன மயமாக்க, அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அதிகமாக முகாம் மற்றும் சிறைகளை சீனா ரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது.