எங்களைத் தற்காத்துக்கொள்ள சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது: தைவான்

எங்களைத் தற்காத்துக்கொள்ள சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது: தைவான்
Updated on
1 min read

சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்கள் ராணுவத்தினருக்கு முழு உரிமை உள்ளது என்று தைவான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தைவான் ராணுவம் தரப்பில், “கடந்த வாரம் தைவான் ஜலசந்தியில் சீனாவின் ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே எதிரிப் படைகள் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறலை நிகழ்த்துகின்றன. எல்லைப் பகுதியில் எதிரிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்களுக்கு முழு உரிமை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபர் சாய் இங்-வென்னுக்கு சீனா இந்த அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.

மேலும், தென் சீனக்கடல் பகுதியையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

முன்னதாக, தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா- சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அண்டை நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்கா 2 போர்க் கப்பல்களை அனுப்பி ஜூலை மாதம் பயிற்சியில் ஈடுபட்டது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது சீனா. இதன் காரணமாக தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in