ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 11 லட்சத்தை நெருங்குகிறது

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 11 லட்சத்தை நெருங்குகிறது
Updated on
1 min read

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,905 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறும்போது, “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மாகாணங்களில் 5,905 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,91,186 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று மட்டும் 134 பேர் பலியான நிலையில், ரஷ்யாவில் இதுவரை கரோனாவுக்கு 19,195 பேர் பலியாகி உள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும், தங்கள் தடுப்பூசி அனைத்துக் கட்டச் சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்றும் ரஷ்யா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in