அனைவருக்கும் கரோனா பரிசோதனைகளைத் தொடங்கிய ஹாங்காங்

அனைவருக்கும் கரோனா பரிசோதனைகளைத் தொடங்கிய ஹாங்காங்
Updated on
1 min read

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பரந்த அளவிலான மருத்துவப் பரிசோதனையை ஹாங்காங் அரசு தொடங்கியுள்ளது.

ஹாங்காங்கில் கரோனா அலை மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஹாங்காங்கில் உள்ள 70 லட்சம் மக்களுக்கும் செப்டம்பர் மாதம் இலவசமாக கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கரோனா பரிசோதனைகளை ஹாங்காங் அரசு தொடங்கியுள்ளது. மக்கள் வரிசையாக கரோனா பரிசோதனைகளைச் செய்து வருவதாக ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 5 லட்சம் பேர் முதல் கட்டமாக, கரோனா பரிசோதனைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே ஹாங்காங்கில் இரட்டை இலக்க எண்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் ஹாங்காங்கில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதால், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் ஹாங்காங்கில் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in