

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,20,800 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாகியுள்ளனர். 16,158 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை கரோனாவுக்கு 1,20,800 பேர் பலியாகியுள்ளனர். 38,62,311 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சனிக்கிழமை 758 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 41,350 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.