

‘‘ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரை ஒருபடி மோசமானவர் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்’’ என்று அமெரிக்க அதி பர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஜோ பிடனை கடுமையாக ட்ரம்ப் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நியூயார்க் போலீஸ் பெனவலன்ட் சங்கத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசியதாவது:
ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரை விட துணை அதிபராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மோசமானவர். ஜோபிடன் அதிபரானால் உடனடியாக போலீஸ் துறையை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு சட்டத்தைக் கொண்டு வந்துவிடுவார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரைவிட எனக்கு இந்திய வம்சாவளி யினரின் ஆதரவு அதிகம் இருக்கிறது.
ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவருமே போலீஸ் துறைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள். உங்களுடைய மரியாதையை, கவுரவத்தை இருவரும் பறிக்கின் றனர். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.