

சுமார் 102 நாட்களுக்குப் பின்னர் நியூசிலாந்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆக்லாந்து நகரில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்களைக் கொண்டிருக்கும் நியூஸிலாந்து தீவில் 100 நாட்களை கடந்து மக்கள் கரோனா தொற்று இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பும் நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தது.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு யார் மூலம் கரோனா பரவியது என்பது இதுவரை கண்டறிப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, “102 நாட்களுக்குப் பின்னர் நியூசிலாந்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்த காரணத்தினால் 22 பேர் மட்டுமே அங்கு கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.