4-வது முறையாக இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றார்

கொழும்பு நகரின் கெலானியாவில் உள்ள ராஜமஹா விஹாரயா புத்த ஆலையத்தில் பதவிஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச, பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதிபர் கோத்தபய ராஜபக்ச : படம் உதவி ட்விட்டர்
கொழும்பு நகரின் கெலானியாவில் உள்ள ராஜமஹா விஹாரயா புத்த ஆலையத்தில் பதவிஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச, பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதிபர் கோத்தபய ராஜபக்ச : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச புத்த ஆலயத்தில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இலங்கையின் பிரதமராக இதற்கு முன் 3 முறை இருந்துள்ள ராஜபக்ச இப்போது 4-வது முறையாக பிரதமராக இன்று பதவி ஏற்றுள்ளார்.

கொழும்பு நகரின் புறநகரான கெலானியாவில் உள்ள ராஜமஹா விஹாரயா எனும் புத்த ஆலயத்தில் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் ராஜ பக்சவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் நாளை பொறுப்பேற்கின்றனர்.

74-வயதாகும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்கள் கட்சி (எஸ்எல்பிபி) தலைவராகவும் உள்ளார். இவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நாட்டின் அதிபராகவும், இளைய சகோதரர் பசில் ராஜபக்ச கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை அரசியலி்ல ராஜபக்ச குடும்பத்தினர் கோலோச்சி வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதத்தோடு மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற அரசியலுக்குள் வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 1970-ம் ஆண்டு தனது 24வயதில் நாடாளுமன்ற எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ச இதுவரை இரு முறை நாட்டின் அதிபராகவும், 3 முறை பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு வெற்றியை ராஜபக்ச தலைமையிலா இலங்கை மக்கள் கட்சி கூட்டணி பெற்றது. 196 இடங்களில் 150 இடங்களை இலங்கை மக்கள் கட்சி பெற்றது.

இதுநாள்வரை இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரசியல்கட்சித் தலைவரும் பெறாத வகையில் 5 லட்சம் வாக்குகளை ராஜபக்ச பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 2005 முதல் 2015-ம் ஆண்டுவரை இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி விகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது திருத்தத்தின்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த திருத்தத்தை ரத்து செய்து, அதிபரின் அதிகாரத்தை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் 150 இடங்களுக்கு மேல் தேவை. இப்போது ராஜபக்சவுக்கு அந்த அதிகாரம் வந்திருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in