

கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் குணப்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் ஆர்எல்எப்-100 எனும் மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த மருந்தை அளிக்கும் போது நுரையீரல் தொடர்பான பாதிப்பிலிருந்து கரோனா நோயாளிகள் மிக விரைவாக மீண்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்எல்எப்-100 எனும் இந்த மருந்து அவிப்டாடில்(aviptadil) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அவிப்டாடில் மருந்து உயிருக்குப் போராடும் கரோனா நோயாளிகளுக்கு வழங்க அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.
ஹூஸ்டனில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முதன்முதலாக ஆர்எல்எப்-100 மருந்தை, தீவிரமான பாதிப்பில் இருந்த கரோனா நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதித்தனர். இந்த மருந்து அளிக்கப்பட்ட சில நாட்களில் நுரையீரல் பாதிப்பிலிருந்து மிக வேகமாக குணமடையத் தொடங்கியதைக் கண்டு மருத்துவர்கள் வியப்படைந்தனர்.
அவிப்டாடில் மருந்து என்பது வாஸ்கோ இன்டெஸ்டினல் போலிபெப்டைட்(விஐபி) கலவையைக் கொண்டது. அதாவது நுரையீரலில் அழற்ச்சி, அடைப்பு போன்றவை இருந்தால் அதை நீக்கவல்லது. நியூரோ ஆர்எக்ஸ், மற்றும் ரிலீப் தெரப்படிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளன.
இதுகுறித்து நியூரோஆர்எக்ஸ், மற்றும் ரிலீப் தெரப்பாட்டிக்ஸ் வெளியி்ட்ட அறிக்கையில் “ கரோனா நோயாளிகள் நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை, அழற்ச்சியை அவிப்டாடில் மருந்து குணப்படுத்துகிறது என்று நியூரோஆர்எக்ஸ், தனியார் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய 15-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தீவரமான தொற்றுக்கு ஆளாகி வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தனர். அவர்களுக்கு அவிப்டாடில் மருந்தை அளித்து பரிசோதித்தபோது அவர்கள் 4 நாட்களில் நுரையிரலில் முன்னேற்றம் அடைந்து வென்டிலேட்டர் சிகிச்சை தேவையிலிருந்து வெளியே வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, நுரையீரலில் இருக்கும் தொற்றை வேகமாக இந்த மருந்து குணப்படுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக 50 சதவீதம் அதற்கும் மேலாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது “ எனத் தெரிவிக்கப்பட்டது