

சீனாவில் புதிதாக 36 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன சுகாதார அமைப்பு கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில் 30 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான கரோனா தொற்றுகள் சின்ஜியாங் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 84,464 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகி உள்ளனர்.
தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.