Published : 01 Aug 2020 05:54 PM
Last Updated : 01 Aug 2020 05:54 PM

பயப்பட வேண்டாம்; கரோனாவை எதிர்கொள்ளுங்கள்: பிரேசில் அதிபர்

நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள். கரோனாவை எதிர்கொள்ளுங்கள் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்று வார சிகிச்சைக்குப் பின்னர் மீண்டார். இந்த நிலையில் கரோனாவைக் கண்டு பிரேசில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார் ஜெய்ர் போல்சனோரா.

இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், “நான் ஒரு நாள் கரோனாவால் பாதிக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக எல்லோரும் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள். அதனை எதிர்கொள்ளுங்கள். நான் மரணங்களுக்கு வருத்தப்படுகிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதான் வாழ்க்கை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறிய நிலையில், அவரின் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன், இயல்பாக இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பிரேசிலில் 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x