Last Updated : 30 Jul, 2020 01:08 PM

 

Published : 30 Jul 2020 01:08 PM
Last Updated : 30 Jul 2020 01:08 PM

இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பிரதிஹாரா சிவன் சிலை மீட்பு: இன்று டெல்லி கொண்டுவரப்படுகிறது

இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ள சிவன் சிலை : படம் | ஏஎன்ஐ.

லண்டன்

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பிரதிஹாரா சிவன் சிலை லண்டனில் இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் இந்தியத் தொல்லியல் துறைக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம், பரோலி நகரில் உள்ள கடேஸ்வர் கோயிலில் இருந்து கடந்த 1998-ம் ஆண்டு இந்த பிரதிஹாரா சிவன் சிலை கொள்ளையடிக்கப்பட்டு, லண்டனுக்குக் கடத்தப்பட்டது. நடராஜர் சதுரா வடிவத்தில், ஜடாமகுடத்தில், திரினேத்திரா கோலத்தில் காட்சியளிக்கும் இந்த சிலை 4 அடி உயரமுள்ளது.

மிகவும் அரிய கோலத்தில், நடனத்தில் இருக்கும் இந்த பிரதிஹாரா சிலை, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரதிஹாரா சிவன் சிலை லண்டனுக்குக் கடத்தப்பட்டு இருப்பதை கடந்த 2003-ம் ஆண்டுதான் இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் லண்டன் தூதரக அதிகாரிகள், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையைக் கடத்தியவர்கள் குறித்தும், அதை வைத்திருந்த அருங்காட்சியகம் குறித்தும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, பிரதிஹாரா சிவன் சிலை கடந்த 2005-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நபர் தாமாக ஒப்படைத்தார்.

அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியத் தொல்லியல்துறை அதிகாரிகள் லண்டன் சென்று அந்தச் சிலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பிரதிஹாரா சிலை, பரோலியில் உள்ள கடேஸ்வர் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 9-ம் நூற்றாண்டு கால சிலை என்பதை உறுதி செய்தனர்.

அதன்பின் மத்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சிலை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்திய கலாச்சார, பாரம்பரிய விஷயங்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறித்தும், அதற்குரிய விசாரணை, சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளின் முயற்சியில் சிலை தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு பிரதிஹாரா சிலை இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரிட்டன் மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் கடத்தப்பட்ட பல்வேறு சிலைகள் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமாக மீட்கப்பட்டுள்ளன.

பிரிட்டனிலிருந்து இதற்கு முன் பிரம்மா-பிரம்மானி சிலை கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்டது. டெல்லியில் உள்ள புரணா குய்லா அருங்காட்சியகத்தில் இருந்து இந்தச் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பகவான் புத்தர் சிலை கடந்த 2018-ம் ஆண்டு மீட்கப்பட்டு கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெண்கலத்தால் செய்யப்பட்ட நவநீத கிருஷ்ணன் சிலை, 2-ம் நூற்றாண்டில் சுண்ணாம்புக் கல்லால் செதுக்கப்பட்ட தூண்வடிவ சிலை ஆகியவை இரண்டும் மீட்கப்பட்டு இந்திய அரசிடம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x