அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து 10,708 ராணுவ வீரர்கள் பலி: அஷ்ரப் கானி

அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து 10,708 ராணுவ வீரர்கள் பலி: அஷ்ரப் கானி
Updated on
1 min read

அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து 10,708 ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறும்போது, “அமெரிக்கா - தலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து 10,708 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 6,781 பேர் காயமடைந்துள்ளனர். பலர் கடத்தப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் பொதுமக்கள் 775 பேர் பலியாகி உள்ளனர். 1,609 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அஷ்ரப் கானியின் சுற்றுப்பயணத்தின்போது தலிபான்கள் வழக்கமான தாக்குதலை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இறப்பு விகிதம் இந்த வருடத்தின் முதல் பகுதியில் 13% ஆகக் குறைந்துள்ளது. வன்முறைச் சம்பவங்களும் குறைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது..

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in