

சவுதியில் ஹஜ் புனித யாத்திரை ஜூலை 29-ம் தேதிமுதல் தொடங்குகிறது என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்த முறை 1000 பேருக்கு ஹஜ் புனித பயணத்திற்கு சவுதி அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரசு தரப்பில், “ ஆயிரத்துக்கும் அதிகமான அல்லது குறைவான பயணிகள் ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள் இதில் அடங்குவர்.160 நாடுகளை சேந்த பயணிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனிதப் பயணம் இந்த ஆண்டு ரத்து இல்லை, அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பயணிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள். உள்நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள் மட்டுமே குறைந்த அளவில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசு முன்னரே அறிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய தற்போது அனுமதி வழங்கியுள்ளது.