

கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டபின் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தன்னால் இனியும் தனித்திருக்க முடியாது என்று மீண்டும் கரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும், பரிசோதனை முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறும்போது, “கரோனா பரிசோதனைக்கான முடிவு இன்னும் சில மணி நேரங்களில் வெளிவரவுள்ளது. நான் முடிவுக்காகக் காத்திருக்கிறேன். என்னால் வீட்டில் வழக்கமாகச் செய்து கொண்டிருப்பதையே தொடர்ந்து செய்ய முடியவில்லை. இது மோசமாக உள்ளது.
நான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும். ஒருவேளை முடிவு வேறாக இருந்தால் நான் இன்னும் சில நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் நலமுடன் இருப்பதாகவும் காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.