

சீனாவின் வடக்குப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சீன நிலநடுக்க ஆய்வு மையம் தரப்பில், ''சீனாவின் வடக்குப் பகுதியில் ஹெபேய் மாகாணத்தின் தங்ஷான் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் உணரப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகின.
சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிசுவான் பகுதியில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.