Last Updated : 24 Sep, 2015 04:56 PM

 

Published : 24 Sep 2015 04:56 PM
Last Updated : 24 Sep 2015 04:56 PM

ஜி-மெயிலில் தேவையற்ற ஐ.டி.க்களை பிளாக் செய்ய புது வசதி

தேவையில்லாமல், மலை போல வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், ஜி-மெயில் 'பிளாக்' மற்றும் 'அன்சப்ஸ்கிரைப்' ஆகிய பொத்தான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

கணிப்பொறிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி, ஒரு வாரத்தில் செல்பேசியின் ஆண்ட்ராய்டு தளத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.

இது குறித்து கூகுள் நிறுவன உற்பத்தி மேலாளர் ஸ்ரீ ஹர்ஷா சோமாஞ்சி பேசியது:

"சில சமயங்களில் உங்களுக்கு விரும்பத்தகாத மெயில்கள் வரலாம். இது அடிக்கடி ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடந்தால், 'இந்த பயனரிடம் இருந்து எனக்கு செய்திகள் வரவேண்டாம்' என்று உங்களால் தைரியமாகச் சொல்லமுடியும்.

அதாவது உங்களால் அத்தகைய நபர்களை பிளாக் செய்யமுடியும். இந்த வசதி இன்றிலிருந்து கணினிகளிலும், ஒரு வாரத்துக்குள் ஆண்ட்ராய்ட் தளத்திலும் அறிமுகமாகும்.

பிளாக் செய்யப்பட்ட மெயில்கள் யாவும், 'ஸ்பேம்' எனப்படும் தேவையில்லாத ஃபோல்டரில் இருக்கும். பயனாளிகள் மனம் மாறி, அந்த மெயிலைப் பார்க்க வேண்டும் என்றால் திரும்பவும் அன்பிளாக் செய்துகொள்ளலாம்.

இந்த வசதியோடு, 'அன்சப்ஸ்கிரைப்' வசதியும் ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத செய்திகளை நேரடியாக ஜி-மெயிலில் இருந்தே அன்சப்ஸ்கிரைப் செய்துவிடலாம். முன்னாள் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருந்த செய்திகளையும் இனிமேல் நீங்கள் படிக்கத் தேவையிருக்காது" என்றார்.

கடந்த ஜூன் மாதம், கூகிள் நிறுவனம், அனுப்பப்பட்ட மெயிலை, 30 விநாடிகளுக்குள்ளாகத் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x