Published : 08 Jul 2020 01:03 PM
Last Updated : 08 Jul 2020 01:03 PM

கலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று

கலிபோர்னியாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கலிபோர்னியா உள்ளிட்ட அமெரிக்காவின் சில மாகாணங்களில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கலிபோர்னியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,201 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கை விலக்கிய அதிபர் ட்ரம்ப் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் சுமார் 50,000 பேர் வரை கரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 30,97,084 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x