

பிரேசிலில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,305 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் நேற்று மட்டும் 43,305 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது கடந்த நாட்களை ஒப்பிடும்போது இரு மடங்காகும். பிரேசிலில் இதுவரை 16,68,589 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66,741 பேர் பலியாகி உள்ளனர். 9,76,977 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனது வழக்கமான அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இயலாமல் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனோரா கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.