Last Updated : 27 Jun, 2020 09:51 AM

 

Published : 27 Jun 2020 09:51 AM
Last Updated : 27 Jun 2020 09:51 AM

எல்லையில் ஏற்கெனவே இருக்கும் நிலையை மாற்ற முயன்றால் தொடர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்து, ஏற்கெனவே இருக்கும் நிலையை சீனா மாற்ற முயன்றால், அது எல்லைப்பகுதியில் அமைதியை மட்டும் குலைக்காது, இரு நாட்டு உறவிலும் தொடர் பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆதலால், கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்குத்தான் சொந்தம், அதில் தங்களுக்குத்தான் இறையாண்மை இருக்கிறது என்று சீனா தொடர்ந்து உரிமை கோருகிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து வருகிறது, ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவுக்கான இந்தியத்தூதர் விக்ரம் மிஸ்ரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது இரு நாட்டு ராணுவக் குவிப்புக்கும் தீர்வு என்பது, சீனா கையில்தான் இருக்கிறது. படைகளைக் குவித்தும், கடுமையான நடவடிக்கையின் மூலமும் எல்லையில் ஏற்கெனவே இருக்கும் நிலையை மாற்ற முடியாது என்பதை சீனா உணர வேண்டும், இந்த விவகாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு இது உகந்த வழியல்ல என்பதை உணரவேண்டும்.

சீன ராணுவம் எடுத்துள்ள கடினமான நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் குறிப்பிடத்த நம்பிக்கையைக் குலைத்துவிட்டது. இனிமேல் இரு நாட்டு உறவையும் எந்த திசையில் கொண்டு செல்வது என்பதை சீனத் தரப்புதான் கவனித்து, கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

இந்தியா –சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றத்துக்கு எல்லையில் அமைதி மற்றும் வன்முறையற்ற சூழலைப் பராமரிப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்தப் பிரச்சினையில் தீர்வை நோக்கித்தான் இந்தியாவின் செயல்பாடு இருக்கிறது. ஆதலால், இந்திய வீரர்கள் வழக்கமாக ரோந்துப் பணிக்குச் செல்லும்போது கூட இடையூறு செய்தல், தடை விதிப்பதை சீனத் தரப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு மிஸ்ரி தெரிவித்தார்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா உரிமை கொண்டாடுகிறதே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தூதர் மிஸ்ரி பதில் அளிக்கையில், “கல்வான் பள்ளத்தாக்கை சீனா உரிமை கொண்டாடுவது முட்டாள்தனமானது. இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலை அமைதிப்படுத்த உதவாது.

இந்திய ராணுவம் தரப்பில் எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், எப்போதுமே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஐ.சி) மீறிச் செயல்படுவதில்லை. எனவே, சீன ராணுவம் தற்போது எல்லையில் இருக்கும் நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இதற்கு முன்னர் ஒருபோதும் கவலைப்படாத ஒரு பிரிவில் அவர்கள் திடீரென அவ்வாறு செய்வது மிகவும் வியப்பாக இருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீரமைப்பு குறித்து இந்தியா தெளிவாகவும், விழிப்புடனும் இருக்கிறது. நீண்ட காலமாகவே இந்தப் பகுதியில் ரோந்து செல்லும் இந்திய ராணுவம் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காமல், யாருக்கும் இடையூறு செய்யாமல் சென்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சீனத் தூதர் சன் வீடாங் கூறியது குறித்து நிருபர் கேட்டபோது, அதற்கு இந்தியத் தூதர் மிஸ்ரி பதில் அளிக்கையில், “ எல்லையில் இப்போதுள்ள சூழல் உருவாவதற்கு சீன ராணுவத்தின் செயல்பாடுகள்தான் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.

ஏப்ரல் முதல் மே மாதத்திலிருந்து எல்லைப்பகுதியிலும் சீனாவின் நடவடிக்கை அதிகரித்துள்ளது. நம்முடைய ராணுவம் ரோந்துப் பணிக்குச் செல்வதிலும், பாதுகாப்புப் பணிக்குச் செல்வதிலும் சீன ராணுவம் தொந்தரவு கொடுத்துள்ளது. இதுதான் எல்லையில் பதற்றத்துக்கான காரணமாகும்.

இருதரப்பு உறவு இரு நாடுகளுக்கும் முக்கியமானது. எங்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல, பிராந்திய அளவிலும் இருதரப்பு உறவு முக்கியமானது. இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்து, தற்போதிருக்கும் நிலையை சீனா மாற்ற முயன்றால், அது எல்லைப்பகுதியில் அமைதியை மட்டும் குலைக்காது, இரு நாட்டு உறவிலும் தொடர் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆதலால், கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x