

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மலாலா (22) தற்போது தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். நான் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து என்னவென்று எனக்குத் தெரியாது. இப்போதைக்கு வாசிப்பு மற்றும் தூக்கம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
கடும் போராட்டங்களுக்குப் பின்னர் தனது கல்வியை நிறைவுசெய்து, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்துப் பலருக்கு முன் உதாரணமாகியுள்ள மலாலாவுக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மலாலா
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.
உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.