Last Updated : 18 Jun, 2020 03:14 PM

 

Published : 18 Jun 2020 03:14 PM
Last Updated : 18 Jun 2020 03:14 PM

இந்தியா கடும் எதிர்ப்பு: 3 இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து வெளியிட்ட வரைபட மசோதா: நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

காத்மாண்டு நகரில் உள்ள நாடாளுமன்ற மேலவையில் இன்று மசோதா நிறைவேறிய காட்சி: படம் ஏஎன்ஐ

காத்மாண்டு


இந்தியாவின் 3 எல்லைப்பகுதிகளை இணைத்து நேபாளம் தன்னிட்சையாக வெளியிட்ட வரைபடத்தின் அரசியல் திருத்த மசோதா இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மேல்சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றியது.

நம் நாட்டு எல்லைகளை இணைத்துக் கொண்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் அந்த எதிர்ப்பையும் மீறி நேபாளம் செயல்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த அரசியல், நிர்வாக வரைபடத் திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தின் மக்களவையில்(கீழ்சபை) நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மேல்சபையில் நிறைவேற்றியுள்ளது

நேபாள நில திருத்தத்துறை அமைச்சர் பத்மா அர்யால் கடந்த மாதம் 20-ம் தேதி அந்நாட்டின் திருத்தப்பட்ட அரசியல், நிர்வாக ரீதியான வரைபடத்தை வெளியிட்டார். அதில் இந்தியாவின் எல்லைப் பகுதிகளான “லிபுலேக்”, “லிம்பியாதுரா”, “கலாபானி” ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரித்திருந்தது.

ஏற்கெனவே கடந்த 8-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம், தார்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்தவைத்தபோது நேபாள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்தியா புதிதாக அமைத்துள்ள 80 கி.மீ. சாலை எங்கள் எல்லைக்குள் வருகிறது என்று நேபாள அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதை மறுத்த மத்திய அரசு முழுவதும் அந்த சாலை இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது என உறுதி செய்தது.

இந்த சம்பவத்தால் மிகுந்த அதிருப்தியில் இருந்த நேபாள அரசு இந்தியத் தூதர் வினய் மோகன் வத்ராவுக்கு சம்மன் அனுப்பிய நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கவாலி, இந்தியாவின் செயலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த இந்திய ராணுவத் தலைவர் எம்எம் நரவானே, “நேபாளத்தின் செயலுக்குப் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள், இது சீனாவாக இருக்கலாம்” எனக் குற்றம் சாட்டினார்.

நேபாளம் மற்றும் இந்தியா எல்லைகளுக்கு இடையே இருக்கும் மேற்குப்பகுதிதான் கலாபானி. இரு நாடுகளும் கலாபானியை தங்கள் பகுதியாக உரிமை கொண்டாடுகின்றன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே சர்ச்சை நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக நேபாள அரசைக் கண்டித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் “ . இந்தியாவின் எல்லைப்பகுதிகளாக இருந்து வரும் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரித்து திருத்தப்பட்ட வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்புற மரியாதையும் மதிக்க வேண்டும் என நேபாளத்துக்கு வலியுறுத்துகிறோம்.

நேபாளத்தின் இந்த தன்னிச்சையான செயல் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான நிலுவையில் இருக்கும் எல்லைப்புற சிக்கல்களை பேசித் தீர்ப்பதற்கு எதிராக இருக்கிறது. இதுபோன்ற செயற்கையாக தனது எல்லையை விரிவுபடுத்திக்காட்டும் நேபாளத்தின் செயலை ஒருபோதும் இந்தியா ஏற்காது .

இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவது நேபாளத்துக்குத் தெரியும். நியாயமற்ற வரைபடத்தின் மூலம் நிலப்பகுதிகளை தங்களுடையதாக காட்டும் நேபாளத்தின் செயல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்திருந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா புதிதாக எல்லை வரைபடத்தை வெளியிட்ட ஆறு மாதங்களில் நேபாளம் புதிதாக இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் எந்த எச்சரிக்கையும் காதில் வாங்காத நேபாள அரசு எல்லைகளைத் திருத்தும் அரசியல் திருத்த மசோதாவை கடந்த சனிக்கிழமை கீழ்சபையில் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றியது.

இந்நிலையில் 57 உறுப்பினர்கள் கொண்ட மேலளவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மசோதாவை அறிமுகம் செய்தது நேபாள அரசு. இந்த மசோதாவுக்கு எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காததால் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் கணேஷ் திமில்சினா இன்று அறிவித்தார்

இனி இந்த மசோதா நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியின் கையொப்பத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கையொப்பமிட்டால் அது அதிகாரபூர்வமாகி நேபாளத்தின் அனைத்து அரசு ஆவணங்களிலும் செல்லத்தக்க வரைபடமாக அங்கீகரிக்கப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x