அமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப்

அமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப்
Updated on
1 min read

அமெரிக்கக் கடற்படை வீரரை ஈரான் அரசு விடுவித்ததற்காக ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஓப்பந்தம் சாத்தியம் என்பதை இந்த நிகழ்வு காட்டியிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மிஷல் வொயிட் என்ற அமெரிக்கக் கடற்படை வீரர், இணையதளம் மூலம் அறிமுகமான பெண்ணைச் சந்திப்பதற்காக கடந்த 2018- ம் ஆண்டு ஈரான் சென்றார். அப்போது அவர் போலியான பெயரில் ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டார், இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மார்ச் மாதத்தில் ஈரானில் கரோனா பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் ஈரான் அரசின் ஒப்புதலின் பெயரில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதிலுக்கு அமெரிக்காவும் இரண்டு ஈரானியர்களை விடுவித்துள்ளது.

மிஷல் வொயிட் விடுதலை குறித்து அவரது தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவரை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மஜித் தெஹ்ரி என்ற ஈரான் - அமெரிக்க மருத்துவரையும், சைரஸ் அஸ்கரி என்ற ஈரான் விஞ்ஞானியையும் அமெரிக்கா விடுதலை செய்துள்ளது.

அமெரிக்கா பிணையாக வைத்துள்ள மற்ற ஈரானியர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஈரான் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல் ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in