

உலகம் முழுவதும் சுமார் 50,90,061 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறும்போது, ''உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,90,061 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 15,93,039 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 3,08,705 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றல் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 94,941 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டனில் அதிகபட்சமாக 35,704 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸில் 28,132 பேரும், ஸ்பெயினில் 27,888 பேரும் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து சுமார் 20,24,222 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சவாலாக உள்ளது.