அமெரிக்காவின் மிரட்டலை மீறி வளைகுடா பகுதியில் தொடர்ந்து செயல்படும் ஈரான்

அமெரிக்காவின் மிரட்டலை மீறி வளைகுடா பகுதியில் தொடர்ந்து செயல்படும் ஈரான்
Updated on
1 min read

அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பிறகும் வளைகுடா பகுதியில் ஈரான் கடற்படை தனது வழக்கமான பணிகளைச் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கப்பல்களை அச்சுறுத்தும் விதமாக ஈரானியக் கப்பல்கள் நடந்துகொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கக் கடற்படைகளுக்கு முன்னரே அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வாறு அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். சமீபத்திலும் அமெரிக்கா ஈரானுக்கு மிரட்டல் விடுத்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி வளைகுடா பகுதியில் ஈரான் தனது வழக்கமான கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய ராணுவ அதிகாரி கூறும்போது, “கடந்த காலங்களைப் போல சர்வதேச கடற்படை விதிகளுக்கு உட்பட்டு ஈரான் வளைகுடா பகுதியில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in