சீனாவிலிருந்து 20 ஆண்டுகளில் 5 கொள்ளைநோய்கள் , இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது: அமெரிக்கா கடும் தாக்கு

ராபர்ட் ஓ’பிரையன், ட்ரம்ப்
ராபர்ட் ஓ’பிரையன், ட்ரம்ப்
Updated on
1 min read

கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவி உலகை அச்சுறுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் இது நிறுத்தப்பட்டாக வேண்டும், என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாதான் காரணம், இதனால் உலகம் முழுதும் 250000 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தையும் கடந்து விட்டது என்றார் ஓபிரையன்.

“உலகம் நெடுகிலும் மக்கள் எழுச்சி பெற்று சீனாவிடம், ‘சீனாவிலிருந்து கிளம்பும் கொள்ளை நோய்களை இனியும் பொறுக்க மாட்டோம்’ என்று கூறும் நேரம் வந்து விட்டது. இது பரிசோதனைக்கூடங்களிலிருந்து பரவியிருந்தாலும் விலங்குச் சந்தையிலிருந்து பரவியிருந்தாலும் எதுவாக இருந்தாலும் இது நல்லதல்ல.

கரோனா வூஹானிலிருந்து தான் பரவியது, எங்களிடம் இதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. ஆனால் வெட் மார்க்கெட்டாக இருந்தாலும் சீனாவாக இருக்கும்பட்சத்தில் லேபிலிருந்து பரவியிருந்தாலும் இரண்டுமே நல்ல பதில்கள் அல்ல.

கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளன. சார்ஸ், ஏவியன் ஃபுளூ, ஸ்வைன் ஃப்ளூ, கோவிட்-19, சீன மக்கள் குடியரசின் இந்த பயங்கரப் பொதுச்சுகாதார நிலையை உலகம் எவ்வளவு நாளைக்குத் தாங்கும்?

அதாவது நான் என்ன கூறுகிறேன் என்றால் ஒரு கட்டத்தில் இதை நிறுத்தியாக வேண்டும். சீன மக்களுக்கு உதவ எங்கள் மருத்துவ வல்லுநர்களை அனுப்ப உத்தேசித்தோம் ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இது நிச்சயம் மிகப்பெரிய கவலைதான். ஆனால் எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பதற்கான கால அளவைநான் அளிக்க முடியாது.

சீனா தங்களது பொதுச் சுகாதாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அவர்கள் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். சீனாவிலிருந்து தோன்றும் இதே போன்ற இன்னொரு வைரஸ் பெருந்தொற்று கொள்ளை நோயை உலகம் தாங்காது. உலகத்திற்கு நடக்கும் மிகப்பெரிய பயங்கரம் இது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல.

உலக பொருளாதாரம் முடங்கியுள்ளது, இது முதல் முறையல்ல 20 ஆண்டுகளில் 5வது முறையாகும். இதனை நிறுத்தியாக வேண்டும், சீனாவுக்கும் உதவி தேவைப்படுகிறது.

உலகநாடுகளிடமிருந்து சீனாவுக்கு உதவி தேவைப்படுகிறது. மீண்டும் இப்படி ஒன்று நிகழாமல் தடுக்க சீனா தன்னை தயார்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 80,000-த்தைக் கடந்தது. மொத்தம் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in