நாட்கள் செல்லச் செல்ல கரோனா வைரஸின் தீவிரம் குறையும்: இத்தாலி மருத்துவ நிபுணர்கள் தகவல்

நாட்கள் செல்லச் செல்ல கரோனா வைரஸின் தீவிரம் குறையும்: இத்தாலி மருத்துவ நிபுணர்கள் தகவல்
Updated on
1 min read

நாட்கள் செல்லச் செல்ல கரோனா வைரஸ் அதன் தீவிரத்தை இழக்கும் என்று இத்தாலி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸின் தன்மை குறித்து மிலன் நகரில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி பிரிவின் இயக்குநர் மஸ்ஸிமோ க்லெமெண்டி கூறுகையில், ''கரோனா வைரஸ் ஆரம்பக் கட்டத்தில் கடும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. ஆனால் தற்போது அதன் தீவிரம் குறைந்திருக்கிறது. உதாரணமாக மார்ச் இறுதி முதல் ஏப்ரல் முதல் பாதி வரையில் தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை மிக அதிக அளவில் இருந்தது.

அந்த சமயங்களில் அவசரச் சிகிச்சைப் பிரிவு கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. ஆனால், தற்போது நோய்த் தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு குறையும் என்று கற்பனைகூட செய்யமுடியாத அளவில் சூழல் ஏப்ரலில் இருந்தது. வைரஸ் அதன் தீவிரத்தை இழந்து மனிதர்களுடன் வாழப் பழகிவிட்டது அல்லது மனிதர்கள் வைரஸுடன் வாழும் அளவுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுவிட்டார்கள் என்று சொல்லலாம். அதேபோல் கோடைக் காலத்தில் வைரஸ் தீவிரம் இழக்கும் என்று கூறப்பட்டது வந்தது. ஆனால் அது ஊகம்தான். அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை.

அதேவேளையில் நாட்கள் செல்லச் செல்ல வைரஸ் அதன் தீவிரத்தை இழக்கும் என்று நம்புகிறோம். சொல்லப்போனால் சளியை ஏற்படுத்தும் வைரஸ் போலவே கரோனா வைரஸும் தன்மை மாற்றம் அடையும்'' என்றார்.

இத்தாலியில் உள்ள மருத்துவமனைகள், ஆய்வகங்கள் கரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளையும் கண்காணிப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.

இத்தாலியில் இதுவரையில் 2.2 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,360 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சம் பேர் குணமாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in