ஊரடங்கின் 49-வது நாளில் கட்டுப்பாட்டை தளர்த்திய இலங்கை

ஊரடங்கின் 49-வது நாளில் கட்டுப்பாட்டை தளர்த்திய இலங்கை

Published on

இலங்கையில் கரோனா தொற்றைத் தடுக்க மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கை பெரும்பாலான உலக நாடுகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கையிலும் ஊரடங்கு இன்று முதல் தளர்த்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள் தரப்பில், “கோவிட் -19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போது இன்று (திங்கட்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்றுமதி, இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அலுவலகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கரோனா தொற்று அதிகம் உள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 863 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர். 343 பேர் குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை 36,605 பேருக்கு கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in